கோவையில் வாக்கு எண்ணும் மையத்தினை கமல்ஹாசன் பார்வையிட்டார்


கோவையில் வாக்கு எண்ணும் மையத்தினை கமல்ஹாசன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 7 April 2021 8:30 PM GMT (Updated: 7 April 2021 8:52 PM GMT)

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு (ஜி.சி.டி.) கொண்டு வரப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த பணி மறுநாள் காலை வரை நீடித்தது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 4,427 வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, 

தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி பாதுகாப்பு அறைகளில் (ஸ்டிராங் ரூம்) வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் இவை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அறையில் வைக்கும் பணிகளை கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார்.

 வாக்குப்பதிவு எந்திரத்தை வைக்கும் அறைக்கு நேரில் சென்ற கமல்ஹாசன், பாதுகாப்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுள்ளதா? ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? என்று அதிகாரிகளிடம் கேட்டு உறுதிப்படுத்தி கொண்டார்.

15 நிமிடங்களுக்குப் பின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து கிளம்பினார். கமல்ஹாசனுடன் கோவை சிங்காநல்லூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் உடன் வந்திருந்தார். அவரும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்படும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

Next Story