தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை- 10 பேர் கைது


தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை- 10 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2021 8:56 PM GMT (Updated: 7 April 2021 8:56 PM GMT)

ராமநத்தம் அருகே தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டன. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநத்தம், 

கடலூா் மாவட்டம்  திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள காந்தி நகரில் நரிக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவின்போது, நரிக்குறவர் தரப்பைச் சேர்ந்த மூர்த்தி மகன் சின்னராசு (24) என்பவர் பூம்பூம் மாட்டுக்காரர்கள் எங்கள் தலைவர் சிவாஜி சொல்லும் நபருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 அதற்கு பூம்பூம் மாட்டுக்காரர்கள் தரப்பை சேர்ந்த பெருமாள் மகன் பொன்னுச்சாமி (55), பொன்னுச்சாமி மகன் தனவேல் (21), பழனி மகன் பெருமாள் (27), காளி மகன் மாயவன் (36), பெருமாள் மகன் ரஜினி (52), கலியன் மகன் ராஜா (27)  ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வீடுகள் சூறை

இதற்கு நரிக்குறவர்கள் தரப்பைச் சேர்ந்த மூர்த்தி மகன் சின்னராசு (24), சாமிதுரை மகன் சிவாஜி (63), மூர்த்தி மகன் சரத்குமார் (28), சிவாஜி மகன் பரந்தாமன் (25), சங்கர் மகன் கார்த்திக் (25), சங்கர் மகன் மாதவன் (22), மூர்த்தி மகன் மாவீரன் (29), முத்துசாமி மகன் ஜேபி (40), முத்துசாமி மகன் மணிகண்டன் (36) ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் இரவில், நரிக்குறவர் தரப்பை சேர்ந்தவர்கள் பூம்பூம் மாட்டுகாரர்கள் பகுதிக்கு சென்று அவர்களை தாக்கியும் 4 பேரின் வீடுகளை சூறையாடியும் உள்ளனர். இதில் பொன்னுச்சாமி மகன் தன்வேல் (21), பழனி மகன் பெருமாள் (27) ஆகியோர் காயமடைந்து  திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் உரிய சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


10 பேர் கைது

இதுகுறித்து பொன்னுச்சாமி அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நரிக்குறவர்கள் தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிவாஜி உள்பட 7 பேரை கைது செய்தனர்.  ஜேபி, மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதேபோல் நரிக்குறவர்கள் தரப்பைச் சார்ந்த சிவாஜி மனைவி லதா (45) அளித்த புகாரின் பேரில்,  மாயவன், ரஜினி, ராஜா, தனவேல், பெருமாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மாயவன், ரஜினி, ராஜா ஆகியோரை கைது செய்தனர். 

மோதல் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story