திருவள்ளூர் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 April 2021 2:01 AM GMT (Updated: 8 April 2021 2:01 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சத்தரை பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், வெங்கடேசன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர் தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கடம்பத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ், நாராயணன், மனோஜ் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் 38 பேர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கொரோனா தொற்று ஏற்படுத்தும் விதமாக ஒன்றுகூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மப்பேடு போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர், தி.மு.க. நிர்வாகிகள் 38 பேர் என மொத்தம் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


Next Story