திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 April 2021 2:34 AM GMT (Updated: 8 April 2021 2:34 AM GMT)

திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா, போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பாதுகாப்பாக வைத்து சீல் வைத்தனர்.

69.53 சதவீதம் வாக்குப்பதிவு

அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியாகயாகவும், சுமுகமான முறையிலும் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 69.53 சதவீதம் வாக்குகள் பதிவானது.

கும்மிடிப்பூண்டியில் 77.93 சதவீதமும், பொன்னேரியில் 77.36 சதவீதமும், திருத்தணியில் 79 சதவீதமும், திருவள்ளூரில் 75.7 சதவீதமும், பூந்தமல்லியில் 73 சதவீதமும், ஆவடியில் 68 சதவீதமும், மதுரவாயலில் 61 சதவீதமும், அம்பத்தூரில் 61.9 சதவீதமும், மாதவரத்தில் 66.7 சதவீதமும் திருவொற்றியூரில் 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது. பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் முன்னிலையில் இருப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து சீல் செய்யப்பட்டு உள்ளது.

178 கண்காணிப்பு கேமராக்கள

இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய எல்லை காவல் படை, மாநில காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 150-க்கும் அதிகமான போலீசார் தங்கி பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 178 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பு அறை உட்புறம், வெளிப்புறம் போன்ற பகுதிகளில் கண்காணிக்கப்பட உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் அவர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் பருண்குமார் ராய், ஷெரிங்நம்யங்கால் பூட்டியா, பவுலுன்தாங் வாய்பபாய், ரமேஷ்குமார் கந்த்தா, ஜானகி, மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் முன்னிலையில் 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருப்பு அறைக்கு சீல் வைத்தனர்.


Next Story