கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே மூதாட்டி படுகொலை
கம்பம் புதிய பஸ் நிலையம் அருேக மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கம்பம் :
தேனி மாவட்டம் கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே காமயகவுண்டன்பட்டி செல்லும் இணைப்புச் சாலை உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில் நேற்று காலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை அந்த வழியாக வேலைக்கு சென்றவர்கள் பார்த்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மூதாட்டியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும், அவரை யார், எதற்காக கொலை செய்தார்கள்? என்றும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் உள்ள ரத்தக்கறைகளை மோப்பம் பிடித்து வி்ட்டு சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன மூதாட்டிகள் குறித்த விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story