அரக்கோணம் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை: 500 மூட்டை நெல் குவியல், டிராக்டர் தீ வைத்து எரிப்பு


அரக்கோணம் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை: 500 மூட்டை நெல் குவியல், டிராக்டர் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 3:16 PM GMT (Updated: 8 April 2021 3:16 PM GMT)

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நெல் குவியல், டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம்

பேச்சுவார்த்தை நடத்த அழைத்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 20), செப்பேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான அர்ஜூன், சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து கிராமமான சித்தம்பாடி பகுதியில் மது அருந்தினர்.

அப்போது பெருமாள்ராஜ பேட்டையை சேர்ந்த நண்பர் ஒருவரிடம், மது அருந்த வரும்படியும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருதரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்படியும் அழைத்தனர்.

கோஷ்டி மோதல்

அதைத்தொடர்ந்து அந்த நபர் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒருவர் மது பாட்டிலால் பெருமாள்ராஜப் பேட்டையில் இருந்து வந்த வாலிபரின் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அவர், போன் செய்து அவரது நண்பர்களை அங்கு அழைத்தார். பதிலுக்கு எதிர் தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் ஆதரவாளர்களை அழைத்தனர்.

சிறிது நேரத்தில் இருதரப்பு கோஷ்டிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாட்டில் மற்றும் கத்தி, கட்டைகளால் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதில் சோகனூரை சேர்ந்த அர்ஜூன், செப்பேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா, மதன், சவுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் அடித்துக்கொலை

அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அர்ஜூன், சூர்யா ஆகிய 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த 2 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சாலை மறியல்

கோஷ்டி மோதல் தகராறில் கொலை நடந்த சம்பவம் சோகனூர் மற்றும் செம்பேடு பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. உடனடியாக அருகில் உள்ள கிராமங்களான சாலை, வேடல், குருவராஜப்பேட்டை, பெருமாள் ராஜப்பேட்டை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

அர்ஜூன், சூர்யா ஆகியோரின் உறவினர்கள் மற்றும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு சாலை - குருவராஜப்பேட்டை செல்லும் வழியில் சோமனூர் சர்ச் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவர்கள் சமாதானம் ஆகாமல், நேற்று 2-வது நாளாக தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், அப்போதுதான் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர்.

நெல் குவியல், டிராக்டருக்கு தீ வைப்பு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அரக்கோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் தொடர்ந்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பெருமாள் ராஜப்பேட்டையைச் சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த 500 மூட்டை நெல் குவியல் மற்றும் அருகில் இருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிதுநேரத்தில் மளமளவென தீ பரவி நெல் குவியல் மற்றும் டிராக்டர் தீயில் கருகி நாசமாகின.

இந்த சம்பவங்கள் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இருதரப்பினர் இடையே நடந்த கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்?, அர்ஜூன், சூர்யா ஆகியோரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் தேர்தல் தொடர்பாக நடந்த தகராறில் வாலிபர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

புது மாப்பிள்ளை

கொலை செய்யப்பட்ட சூர்யாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. அதேபோல் அர்ஜூனுக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகிறது.

தேர்தல் தொடர்பான தகராறில் 2 வாலிபர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடாமல் இருக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின்பேரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

Next Story