கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை


கெலமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2021 5:25 PM GMT (Updated: 8 April 2021 6:52 PM GMT)

கெலமங்கலம் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி தடிக்கல் அருகே உள்ள குடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். விவசாயி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த மாதேவியம்மா மகள் சந்திரம்மாவை (வயது 21) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சந்திரம்மாவிடம் வரதட்சணையாக பணம் மற்றும் நகை வாங்கி வரச்சொல்லி மாதேவன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்துள்ளார். இதேபோல் கடந்த வாரமும் தாயார் அனுப்பி வைத்தார்.

கடந்த 6-ந் தேதி இரவு 8 மணிக்கு கணவருடன் சண்டை போட்டு விட்டு சந்திரம்மா வீட்டை விட்டு சென்றார். அவர் தாயார் வீட்டுக்குத்தான் போயிருப்பார் என்று நினைத்து கணவர் வீட்டினர் தேடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் மறுநாள் சந்திரம்மா உடல் அவர்களது விவசாய கிணற்றில் மிதந்தது.

இதுபற்றி சந்திரம்மா தாயார் மாதேவியம்மா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது மகள் வரதட்சணை கொடுமையால் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து சந்திரம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரம்மாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story