குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு


குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 8 April 2021 7:42 PM GMT (Updated: 8 April 2021 7:42 PM GMT)

சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சுரண்டை, ஏப்:
சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் ஊர் ஊராக சென்று கியாஸ் அடுப்பு மற்றும் ஸ்டவ் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து, ஸ்டவ் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அய்யப்பன் மகன் சக்திவேல் (வயது 15), சுந்தரபாண்டியபுரம் பெரியகுளத்திற்கு மீன் பிடிக்க சென்றான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. குளத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால், அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

உடல் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து சக்திவேல் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகி விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. 
இந்த நிலையில் தீயணைப்பு நிலைய தென்காசி மாவட்ட உதவி அலுவலர் வெட்டும் பெருமாள் தலைமையில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் மற்றும் வீரர்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் நேற்று காலை மீண்டும் சக்திவேல் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்துக்கு பிறகு மாலை 4.40 மணியளவில் அவனது உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story