ஸ்டூடியோ உரிமையாளரை தாக்கியவர் கைது


ஸ்டூடியோ உரிமையாளரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 8 April 2021 8:15 PM GMT (Updated: 8 April 2021 8:15 PM GMT)

சிவகிரி அருகே ஸ்டூடியோ உரிமையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி, ஏப்:
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பாரதி கீழமேல் தெருவில் வசிப்பவர் சடையாண்டி மகன் மாரிமுத்து (வயது 28). இவர் ஸ்டூடியோ வைத்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இவர் அக்கட்சியில் இருந்து விலகி தற்போது வேறு கட்சியில் சேர்ந்தார். தற்போது நடைபெற்ற வாசுதேவநல்லூர் சட்டமன்ற தேர்தலில் மாரிமுத்து அந்த கட்சியின் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து தனது ஸ்டூடியோவில் இருந்தார். அப்போது வாசுதேவநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் (35) என்பவரும், வடுகப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் காசிராஜன் ஆகிய இருவரும் சேர்ந்து மாரிமுத்துவிடம், எங்களை விட்டு பிரிந்து சென்று அந்த கட்சிக்கு ஆதரவாக எவ்வாறு செயல்படலாம் என்று கூறி மாரிமுத்துவை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர், சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து காசிராஜனை கைது செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story