சேலம் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியது


சேலம் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியது
x
தினத்தந்தி 8 April 2021 10:34 PM GMT (Updated: 8 April 2021 10:34 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியது.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 
இந்த நிலையில் நேற்று 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 பேர், சங்ககிரியில் 7 பேர், ஓமலூரில் 6 பேர், நங்கவள்ளி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், வீரபாண்டியில் 4 பேர், காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், வாழப்பாடியில் 2 பேர், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, சேலம் ஒன்றியம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
34 ஆயிரத்தை தாண்டியது
மேலும் சென்னையில் இருந்து சேலம் வந்த 2 பேர், நாமக்கல், கோவை, தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 458 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 மாதங்களுக்கு பிறகு..
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதாவது 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 100-யை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Next Story