கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு-தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவு


கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு-தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவு
x
தினத்தந்தி 8 April 2021 10:38 PM GMT (Updated: 8 April 2021 10:38 PM GMT)

கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சேலம்:
கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வாக்கு எண்ணும் மையம்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து எண்ணப்படுகின்றன. 
கடந்த 6-ந் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ராமன் நேற்று கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவு குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கக்கூடாது. மே 2-ந் தேதி வரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளின் முகவர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

Next Story