சேலத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவத்தினர் சொந்த ஊர் பயணம்


சேலத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவத்தினர் சொந்த ஊர் பயணம்
x
தினத்தந்தி 8 April 2021 10:57 PM GMT (Updated: 8 April 2021 10:57 PM GMT)

சேலத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவத்தினர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அன்று பாதுகாப்பு பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவத்தினர், வடமாநிலங்களில் இருந்து வந்து ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவத்தினரை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 107 பேர் தங்களது உடைமைகளுடன் சேலம் வழியாக சென்ற ரெயில் மூலம் மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டனர். அதேபோல், துணை ராணுவ படையை சேர்ந்த 135 பேரும் சேலத்தில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மீதமுள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story