சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் ‘இ-பாஸ்’ முறை அமல்


சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் ‘இ-பாஸ்’ முறை அமல்
x
தினத்தந்தி 11 April 2021 3:56 AM GMT (Updated: 11 April 2021 3:56 AM GMT)

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் ‘இ-பாஸ்’ முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் ஏற்கனவே ‘இ-பாஸ்’ முறை அமலில் உள்ளது. ஆனால் உள்நாட்டு முனையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே ‘இ-பாஸ்’ அமல்படுத்தப்பட்டது. எனினும் விமான நிலையம் வரும் வெளிமாநில பயணிகளிடம் யாரும் ‘இ-பாசை’ பரிசோதிக்கவில்லை. ‘இ-பாஸ்’களை மாநில வருவாய் துறையினா்தான் சோதனை நடத்த வேண்டும். ஆனால் அவர்கள், தோ்தல் பணியில் தீவிரமாக இருந்ததால் விமான நிலையம் வரவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் வெளிமாநில பயணிகள் பலர் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ‘இ-பாஸ்’ இல்லாமலே பயணித்து வந்தனா்.

மீண்டும் ‘இ-பாஸ்’ அமல்

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் மிக அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.இதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மீண்டும் ‘இ-பாஸ்’ முறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று கூறி உள்ளது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முதல் ‘இ-பாஸ்’ முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதில் கா்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் ‘இ-பாஸ்’சில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கவுண்ட்டர்கள்

இதற்காக செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறையினா் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் சிறப்பு கவுண்ட்டா்கள் அமைத்து வெளி மாநில பயணிகளுக்கு ‘இ-பாஸ்’களை வழங்கி வருகின்றனா். பல பயணிகள் ஆன்-லைன் மூலம் செல்போன்களில் ‘இ-பாஸ்’களை பதிவிறக்கம் செய்து அதை காட்டிவிட்டு வெளியே செல்கின்றனா்.

‘இ-பாஸ்’ இல்லாமல் வரும் வெளிமாநில பயணிகள் யாரையும் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டுக்குள் திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ தேவை இல்லை. ஆனால் அவா்களுக்கு ‘தொ்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலை மட்டும் பரிசோதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த ‘இ-பாஸ்’ முறை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story