15 மாவட்டங்களில் அதிக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது


15 மாவட்டங்களில் அதிக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 11 April 2021 1:08 PM GMT (Updated: 11 April 2021 1:08 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த 15 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. மேலும் நேற்று (சனிக்கிழமை) தமிழகத்தில் 5 ஆயிரத்து 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 83 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 652 ஆண்கள், 2 ஆயிரத்து 337 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 183 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 934 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,952 பேரும், செங்கல்பட்டில் 615 பேரும், கோவையில் 501 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சியில் 21 பேரும், பெரம்பலூரில் 7 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

23 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே ஒரு லட்சத்து 1,836 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 816 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 59 ஆயிரத்து 486 ஆண்களும், 3 லட்சத்து 67 ஆயிரத்து 294 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 33 ஆயிரத்து 686 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 28 ஆயிரத்து 596 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 16 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 23 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், நாகப்பட்டினத்தில் தலா இருவரும், திண்டுக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், வேலூரில் தலா ஒருவரும் என 9 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 886 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1,952 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,952 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 526 பேரும், செங்கல்பட்டில் 272 பேரும், கோவையில் 217 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 257 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 37 ஆயிரத்து 673 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story