சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் துபாய் விமானம் ரத்து; 182 பயணிகள் அவதி


சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் துபாய் விமானம் ரத்து; 182 பயணிகள் அவதி
x
தினத்தந்தி 12 April 2021 2:59 AM GMT (Updated: 12 April 2021 2:59 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானம் எந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் செல்ல இருந்த 182 பயணிகள் அவதி அடைந்தனர்.

எந்திரக்கோளாறு

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு விமானம் செல்ல இருந்தது. 182 பயணிகள் அந்த விமானத்தில் செல்ல அதிகாலை 1 மணிக்கு முன்பாகவே அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனா். விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பாக விமானி, விமானத்தின் எந்திரங்களை சரிபாா்த்தாா். அப்போது விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளதை கண்டுபிடித்தார்.

இதே நிலையில் விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதால் விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவித்தாா். இதுபற்றி விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

விமானம் ரத்து

உடனடியாக விமான என்ஜினீயர்கள் குழுவினா் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் துபாய் செல்ல வேண்டிய பயணிகள் 182 பேரும் விமான நிலையத்தில் உள்ள ஓய்வுகூடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் விமானத்தில் ஏற்றப்படாமல் ஓய்வுகூடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்ததால் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஆனால் விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரி செய்ய முடியாததால் துபாய் விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அந்த விமானம் மீண்டும் துபாய்க்கு புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் செல்ல காத்திருந்த 182 பயணிகளும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.

 


Next Story