போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர் சிக்கினார்


போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 12 April 2021 5:50 PM GMT (Updated: 12 April 2021 5:50 PM GMT)

உளுந்தூர்பேட்டை பகுதியில் போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே சேர்ந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷாஜகான். நெல், உளுந்து விதைகளை விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் உளுந்தூர்பேட்டை அருகே விதைகள் விற்பனை செய்தவகையில் கிடைத்த ரூ.24 ஆயிரத்து 500-ஐ எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 
அப்போது அவரை மர்மநபர் ஒருவர் வழிமறித்து தான் உளுந்தூர்பேட்டை போலீஸ் என கூறி ஷாஜகானிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றார். இதேபோல் அந்த மர்மநபர் களமருதூரில் ராஜமூர்த்தி என்பவரிடமும் போலீஸ் என கூறி ரூ.8 ஆயிரத்து 500-ஐ பறித்து கொண்டு தப்பிச்சென்றார்.

கைது

 இது குறித்த புகாரின் பேரில் உளுந்துர்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  தஞ்சாவூர் அருகே ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த மர்மநபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாணையில் அவர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 49) என்பதும், போலீஸ் போல் நடித்து ஷாஜகான், ராஜமூர்த்தி ஆகியோரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து  மோட்டார் சைக்கிள், ரூ.34 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Next Story