சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 12 April 2021 10:40 PM GMT (Updated: 12 April 2021 10:40 PM GMT)

சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு
சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள ஆலாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் ரகுநாதன். இவருடைய மகன் கதிர் (வயது 17). இவர் சென்னிமலை அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். கதிருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கதிரின் பெற்றோர் தங்களுடைய மகள் வீட்டு்க்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கதிர் வீட்டுக்குள் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கதிரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கதிர் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார் என்பதும், ஏற்கனவே 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அம்மாபேட்டை அருகே குறிச்சியை அடுத்துள்ள செல்லங்குட்டையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சக்திவேல் (25). கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை இறந்துவிட்டதால் தாய் பழனியம்மாள் மற்றும் தம்பி பூபதியுடன் வசித்து வந்தார். அனைவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் சக்திவேல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பூபதி தட்டி கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சக்திவேல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனது வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story