தீ விபத்துகளை தடுப்பது எப்படி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு


தீ விபத்துகளை தடுப்பது எப்படி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 April 2021 5:54 PM GMT (Updated: 14 April 2021 5:54 PM GMT)

தீ விபத்துகளை தடுப்படி எப்படி என்பது குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொள்ளாச்சி

தீ விபத்துகளை தடுப்படி எப்படி? என்பது குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தீயணைப்பு தொண்டு வாரம்

தீயணைக்கும் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையம் மூலம் தீயணைப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆனைமலையில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 

மாசாணியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலைய பணியாளர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர்.  இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்கள் விழிப்புணர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தரமான ரப்பர் டியூப்களை உபயோகிக்க வேண்டும். சமையல் செய்யும்போது இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வதுடன் தீப்பிடித்தால் ஓடாமல் நின்று கீழே படுத்து தரையில் உருள வேண்டும்.

 சமையல் அறையில் ஒரு சிலிண்டரை தவிர வேறு சிலிண்டர், அது காலியானதாக இருந்தாலும் அருகில் வைக்க கூடாது. 

பள்ளி நடக்கும் போது நுழைவு வாயில் கதவுகள் மற்றும் அவசர வழிகள் திறந்து வைக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தீ விபத்தின்போது வெளியேறுதல் பயிற்சி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு வாரம் ஒரு முறை நடத்த வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story