களம்பூர் அருகே; கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
களம்பூர் அருகே கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரை அடுத்த கீழ்ப்பட்டு ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் சாதாரண தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 35 நாட்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 100 நாட்களும் வேலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கிராம மக்கள் இதைக் கண்டித்தும், தங்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக்கூறி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில் கிராம மக்கள் பலர் ஆரணி-போளூர் நெடுஞ்சாலையில் வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசார், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஓரிரு நாட்களில் பேசி வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story