4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


4 வயது சிறுமிக்கு   பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 April 2021 7:32 PM GMT (Updated: 16 April 2021 7:32 PM GMT)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை:
4 வயது சிறுமி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். 
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஏற்கனவே அரசு சார்பில் ரூ.2½ லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ரூ.2½ லட்சம் உதவித்தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜரானார்.

Next Story