சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி மேலும் 214 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி மேலும் 214 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 April 2021 8:47 PM GMT (Updated: 16 April 2021 8:47 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 195 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 214 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 110 பேர், ஓமலூரில் 14 பேர், ஆத்தூரில் 12 பேர், சேலம் ஒன்றியம், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், வீரபாண்டியில் 6 பேர், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், மேச்சேரியில் 4 பேர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், காடையாம்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஏற்காட்டில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
141 பேர் டிஸ்சார்ஜ்
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 141 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1,314 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் 92 வயதுடைய மூதாட்டி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் சேலத்தை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.

Next Story