கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 April 2021 6:34 PM GMT (Updated: 17 April 2021 6:34 PM GMT)

கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர்
1,000 படுக்கை வசதிகள்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கரூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை, தாந்தோணி அரசு கலைக்கல்லூரி ஆகிய பகுதிகளில் படுக்கை வசதிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் தெரிவித்ததாவது:-
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதிக அளவிலான நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதன்படி கரூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளும், தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் 300 படுக்கை வசதிகளும், புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் சுமார் 200 படுக்கை வசதிகள் அமைத்திடவும், மேலும் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் அமைப்பதற்கான இடங்களையும் தேர்வு செய்து 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை பிரிவுகளை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
சுழற்சி முறையில் குழுக்கள்
கட்டில்கள், மெத்தைகள், படுக்கையில் அமைக்கப்படும் விரிப்புகள், தலையணைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து என்னென்ன தேவை என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தேவையான பொருட்களை உடனடியாக வாங்கி நாளைக்குள் (திங்கட்கிழமை) 1,000 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் இருக்கும் வகையில் பணிகளை முடிக்க வேண்டும். அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள், கழிப்பிடம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள், உயிர் மருத்துவக்கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவோர் என 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் குழுக்களை அமைக்க வேண்டும். அனுமதிக்கப்படும் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
சத்தான உணவுப்பொருட்கள்
பாதுகாப்பு கவச உடைகள், முக கவசங்கள், கையுறைகள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி சத்தான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகள் அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். 
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பாலகணேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ், கரூர் நகராட்சி ஆணையர் சுதா மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story