மே 2-ந்தேதி காலை 8 மணி வரை பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்படும் கலெக்டர் தகவல்


மே 2-ந்தேதி காலை 8 மணி வரை பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்படும் கலெக்டர் தகவல்
x

வாக்கு எண்ணும் நாளான அடுத்த மாதம் மே 2-ந்தேதி காலை 8 மணி வரை பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்படும் என பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.

கரூர்
அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே மாதம் 2-ந்தேதி நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்றது. காலையில் கரூர் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளுக்கும், மதியம் கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குமான அலுவலர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் 64 பேரும், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் 62 பேரும், நுண்பார்வையாளர்கள் 64 பேரும் ஈடுபடவுள்ளனர். 
அடையாள அட்டை கட்டாயம்
அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது:- வருகிற 2-ந்தேதி அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது பணியில் உள்ள அலுவலர்கள் அனைவரும் காலை 5 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான அடையாள அட்டையினை கட்டாயம் அணிந்து வரவேண்டும். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
கணினிமுறை குலுக்கல்
செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏதும் கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கு 24 மணிநேரத்திற்கு முன்பு நடைபெறும் கணினிமுறை குலுக்கலில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் பணிபுரிய வேண்டிய சட்டமன்ற தொகுதிகள் இறுதி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 5 மணியளவில் கணினிமுறை குலுக்கல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவிருக்கும் டேபிள் எண் ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி மற்றும் டேபிள்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சென்றுவிடவேண்டும். 
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள டேபிளில் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்குச்சாவடி மைய எண்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும். அதனடிப்படையில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பதிவான ஓட்டுகள் அடங்கிய கட்டுப்பாட்டு கருவிகள் வாக்கு எண்ணிக்கைக்காக வழங்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை டேபிளிலும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் பணியில் இருப்பர்.
தபால் வாக்குகள்
தபால் வாக்கு எண்ணிக்கைக்காக 1 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 2 வாக்கு எண்ணிக்கை உதவியாளர், 1 நுண்பார்வையாளர் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதிகபட்சம் 4 தபால் வாக்கு எண்ணிக்கை டேபிள்கள் அமைக்கப்படும் ஒவ்வொரு டேபிளிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2-ந்தேதி காலை 8 மணி வரை பெறப்படும் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்து கொள்ளப்படும். அதன் பின்னர் பெறப்படும் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது
இவ்வாறு அவர் தெரிவித்தார். 
கலந்து கொண்டவர்கள்
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷாஜகான், சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story