முககவசம் அணியாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை


முககவசம் அணியாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 18 April 2021 7:36 PM GMT (Updated: 18 April 2021 7:38 PM GMT)

பெரம்பலூரில் முககவசம் அணியாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவிற்கு மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளபோதும், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமடையவில்லை.
முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மீது போலீசார், சுகாதாரத்துறை, நகராட்சி, உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தும், பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளையும் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் முறையாக பின்பற்றுவதில்லை.

கட்டாய பரிசோதனை

இந்த நிலையில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் நேற்று முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு நகராட்சி, போலீசார், சுகாதாரத்துறையினர் அபராதம் விதிக்காமல், அவர்களுக்கு கட்டாய கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதில் சிலர் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஓடியதை காண முடிந்தது. இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும் பஸ்களில் முககவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கும் கட்டாய கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story