சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது பயங்கரவாத பயிற்சி பெற்றவரா? அதிகாரிகள் விசாரணை


சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது பயங்கரவாத பயிற்சி பெற்றவரா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 19 April 2021 1:36 AM GMT (Updated: 19 April 2021 1:36 AM GMT)

தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று வந்த வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏமனில் பயங்கரவாத பயிற்சி பெற்றாரா? என அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 31 வயது வாலிபர் ஒருவரின் பாஸ்போர்ட்டு மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர். அதில் அவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்கான விசாவில் சென்று இருந்தார்.

ஆனால் அவா், சட்டவிரோதமாக துபாயில் இருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்று சுமார் 6 மாதங்கள் தங்கி இருந்து விட்டு தற்போது துபாய் வழியாக விமானத்தில் சென்னை வந்தது தெரியவந்தது.

ஏமன் நாட்டில் பயங்கரவாத இயக்கத்தை சோ்ந்தவா்கள் அதிகமாக இருப்பதாகவும், மற்ற நாடுகளை சோ்ந்த இளைஞா்களுக்கு அங்கு பயங்கரவாத பயிற்சி அளித்து பயங்கரவாதிகளாக மாற்றுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்தியா்கள் யாரும் ஏமன் நாட்டுக்கு செல்லக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தது.

இந்த தடையை மீறி அவர், ஏமன் நாட்டுக்கு சென்று 6 மாதங்கள் தங்கி இருந்துவிட்டு சென்னை திரும்பியதை குடியுரிமை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து அவரை வெளியே விடாமல் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினா். மத்திய உளவுப்பிரிவு, பயங்கரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை செய்தனர்.

அந்த வாலிபர், தான் வேலைக்காக துபாய் சென்றதாகவும். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காததால் வேலை தேடி ஏமன் நாட்டுக்கு சென்றதாகவும் கூறினார். ஆனால் அதிகாரிகள் அதை நம்பவில்லை. அவா் ஏமனில் பயங்கரவாத பயிற்சிக்காக சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனா்.

அவரது சொந்த மாவட்டமான பெரம்பலூா் போலீசுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்து அவருடைய பின்னணி பற்றி விசாரணை நடத்துகின்றனா். அவர் ஏமன் சென்றதில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது? என்றும் விசாரணை நடத்துகின்றனா்.

மேலும் அந்த வாலிபர், ஏமனில் பயிற்சி பெற்ற பயங்கரவாதியா? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரை மேல் விசாரணை செய்வதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனா். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story