மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி பேராசிரியர் பலி
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடம்பாக்கம் சந்தோஷ் கார்டன், ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகத்துக்கு சென்று கொண்டிருந்தார். ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது, சாலையின் குறுக்கே 2 பெண்கள் வந்தனர். அவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
அப்போது பின்னால் வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அசோக்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story