ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 20 April 2021 8:45 PM GMT (Updated: 20 April 2021 8:45 PM GMT)

பெரம்பலூரில், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்க கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்:

லாரிகளில் அதிக பாரம்
பெரம்பலூர் ராம்நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான கல்குவாரி கோனேரிபாளையம் அருகே உள்ளது. கடந்த 18-ந்தேதி செந்தில்குமாரின் கல்குவாரியில் இருந்து கற்களை (புளுமெட்டல்) ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் புறவழிச்சாலையில் வந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், அந்த லாரிகளை மறித்து சோதனையிட்டார்.
இதையடுத்து அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, சுரங்கம் மற்றும் கனிம வளங்களை அதிகப்படியாக எடுத்துச்செல்லும் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
லஞ்சம் கேட்டார்
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ்(வயது 48), செந்தில்குமாரிடம் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு உடன்பட மறுத்த செந்தில்குமாரிடம் ரூ.50 ஆயிரம் வரை பேரம் பேசியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, செந்தில்குமாரின் குவாரியில் பணிபுரியும் ஊழியர் ஜார்ஜ்பெர்னான்டஸ், நேற்று காலை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ரூ.50 ஆயிரத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் கொடுத்தார்.
அதை அவர் பெற்றபோது, வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசந்திரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் இன்ஸ்பெக்டர் பால்ராஜை கைது செய்து, ரூ.50 ஆயிரத்தை கைப்பற்றினர்.
விசாரணை
மேலும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தின் கதவுகளை அடைத்துக்கொண்டு நேற்று மாலை வரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பெரம்பலூர் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணனை வரவழைத்து அவரிடமும், போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், பதிவு எழுத்தர் உள்பட அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் பால்ராஜை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். கைதான இன்ஸ்பெக்டர் பால்ராஜ் புதுக்கோட்டை மாவட்டம் வீரக்குடியை சேர்ந்தவர் ஆவார்.
3-வது சம்பவம்
சமீபத்தில் தமிழக அரசின் திருமண உதவி திட்ட பயனாளியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் ஊர் நல அலுவலர் ஷெரீன் ஜாய் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவில் பணிபுரிந்து வரும் ஏட்டு வெங்கடேசன் ரோஸ் நகரில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வீட்டு வரிநிர்ணயம் செய்திட நகராட்சி அலுவலகத்தை அணுகியபோது அவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி இளநிலை உதவியாளர் அப்பு என்கிற அப்லோசன்(48) கடந்த 7-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது, கடந்த 4 மாதங்களில் நடந்த 3-வது சம்பவமாகும்.

Next Story