இரவு நேர ஊரடங்கை மீறிய 50 பேர் மீது வழக்கு பதிவு


இரவு நேர ஊரடங்கை மீறிய 50 பேர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 21 April 2021 11:02 PM GMT (Updated: 21 April 2021 11:02 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறிய 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறிய 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இரவு நேர ஊரடங்கு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினசரி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. எனினும் மருத்துவம், அவசர தேவைக்கு வழக்கம்போல் வாகனங்கள் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு முதல் அமலுக்கு வந்தது.
தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 மாநில எல்லை சோதனை சாவடிகளிலும்,  மாவட்ட சோதனை சாவடிகளிலும் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும் இரவு நேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், இதேபோல் கோபி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
50 பேர் மீது வழக்கு
ஈரோடு மாநகர் பகுதியில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய 3 பேர் மீதும், வீரப்பன்சத்திரம் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்ட 2 கடைகளின் உரிமையாளர்கள் மீதும், காரில் ஊர் சுற்றிய ஒருவர் மீதும் என 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை மீறியதாக மொத்தம் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story