3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; கார் நிறுவனம் மூடல்


3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; கார் நிறுவனம் மூடல்
x
தினத்தந்தி 22 April 2021 6:21 PM GMT (Updated: 22 April 2021 6:25 PM GMT)

3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; கார் நிறுவனம் மூடப்பட்டது.

திருப்பரங்குன்றம்,

மதுரை அருகே உள்ள ஒரு தனியார் கார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 66 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவக்குமார் உத்தரவின்பேரில வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி தலைமையில் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், வரதராஜன், சரவணன் ஆகியோர் கார் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கு முழுவீச்சில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி கூறும்போது, கார் நிறுவனத்தில் பணியாற்றும் 66 பேரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு பணியாற்றும் 63 பேருக்கு பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளிகளுக்கு தொற்று இல்லை என்று உறுதிபடுத்தும் வரை தற்காலிகமாக நிறுவனத்தை மூட வேண்டும் என்றார். மேலும் சுகாதார துறையின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து கார் நிறுவனம் மூடப்பட்டது.

Next Story