கோவில்களின் வெளியே நின்று வழிபாடு செய்த பக்தர்கள்


கோவில்களின் வெளியே நின்று வழிபாடு செய்த பக்தர்கள்
x
தினத்தந்தி 24 April 2021 10:19 PM GMT (Updated: 24 April 2021 10:19 PM GMT)

பிரதோஷத்தையொட்டி அபிஷேகத்தின்போது கோவில்களின் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பெரம்பலூர்:

சனிப்பிரதோஷ விழா
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ விழா நேற்று நடந்தது. தற்போது கொரோனா பரவலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டும்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் திரளான பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று மனமுருகி நந்தி பெருமானை வழிபட்டதை காண முடிந்தது. தீபாராதனை முடிந்த பிறகு பக்தர்கள் நந்தி பெருமானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் சென்று நந்தி பெருமானை தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரம்
பெரம்பலூரில் உள்ள அகிலாண்ேடஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவிலின் வெளியே நின்று பக்தர்கள் நந்தி பெருமானை வழிபட்டனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

Next Story