நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி


நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
x
தினத்தந்தி 27 April 2021 5:06 AM GMT (Updated: 27 April 2021 5:06 AM GMT)

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம், தர்கா சாலையை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 18). இவர், அப்பகுதியில் உள்ள மறைமலை அடிகளார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று மதியம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் குளித்தார். நண்பர்கள் அனைவரும் குளத்தில் ஆனந்தமாக விளையாடி குளித்து கொண்டிருந்தனர்.

நீரில் மூழ்கி பலி

அப்போது விக்னேஷ், திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாத்திஹ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நீண்டநேரம் போராடி குளத்தில் மூழ்கி பலியான மாணவர் விக்னேஷ் உடலை மீட்டனர்.

சங்கர்நகர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story