மெக்கானிக் உள்பட 2 பேர் பலி


மெக்கானிக் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 April 2021 7:03 PM GMT (Updated: 28 April 2021 7:03 PM GMT)

வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் மெக்கானிக் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 25). இவர் குன்னத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் வேலைகளை முடித்துக்கொண்டு சொந்த ஊரான ஒதியத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குன்னம் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை குன்னம் போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி காந்திநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருக்கன்குடி கைகாட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரவணன் பலியானார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த காசி பைரவனை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story