சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் மருத்துவ சமுதாயத்தினர் மனு


சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- கலெக்டரிடம் மருத்துவ சமுதாயத்தினர் மனு
x
தினத்தந்தி 30 April 2021 6:33 PM GMT (Updated: 30 April 2021 6:33 PM GMT)

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மருத்துவ சமுதாயத்தினர் மனு கொடுத்தனர்.

நெல்லை, மே:
தமிழ்நாடு அனைத்து மருத்துவர் சமுதாய முன்னேற்ற நலச்சங்கம், நெல்லை, தென்காசி மாவட்ட சவரம் மற்றும் அமைப்புசாரா நலச்சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். 
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
மருத்துவ சமுதாய மக்களாகிய நாங்கள் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் மாநகராட்சி, நகராட்சி பகுதியில் நோய் தொற்று பரவல் காரணமாக அனைத்து சலூன் கடைகளையும் அடைக்க உத்தரவிட்டுள்ளது. முடி திருத்தும் தொழிலாளர்கள் கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் தான் அதிகமானோர் உள்ளனர். கடந்த ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட தடையால் மருத்துவ சமுயாத மக்கள் மிகவும் சிரமப்பட்டோம். இந்த நிலையில் மீண்டும் சலூன் கடைகளை அடைக்க உத்தரவிட்டு இருப்பதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் நோய் தொற்று பரவாத வகையில் சலூன் கடைகளை திறக்க அனுமதி தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.
அப்போது சங்க செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் சம்போ முருகன், நிர்வாகிகள் ரமேஷ், செல்வகுமார், பாலசந்தர், வசிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story