தக்கலை மீன் சந்தையில் திரண்ட அசைவ பிரியர்கள்


தக்கலை மீன் சந்தையில்  திரண்ட அசைவ பிரியர்கள்
x
தினத்தந்தி 30 April 2021 7:47 PM GMT (Updated: 30 April 2021 7:47 PM GMT)

2 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடையையொட்டி தக்கலை சந்தையில் மீன் வாங்க கூட்டம் அலைமோதியது.

பத்மநாபபுரம்:

2 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடையையொட்டி தக்கலை சந்தையில் மீன் வாங்க கூட்டம் அலைமோதியது.

மீன் சந்தை

கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்தி உள்ளது. முதலில் இரவு ஊரடங்கும், அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டது. 
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் அசைவ பிரியர்கள் சனிக்கிழமையே இறைச்சியை வாங்க கூட்டமாக இறைச்சிகடைகளில் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) மீன்கடைகள், இறைச்சிகடைகள் திறக்க அரசு தடைவிதித்தது. 

பொதுமக்கள் திரண்டனர்

இதனால் நேற்று மீன்சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்களுக்கும் சேர்த்து ஒவ்வொருவரும் கிலோ கணக்கில் மீன்களை வாங்கினார்கள். இதனால் விற்பனைக்கு கொண்டு வந்த மீன்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதனால் குமரி மாவட்டத்தில் மீன் வாங்க வந்த பலருக்கு மீன் கிடைக்காததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது இந்தநிலையை நேற்று தக்கலை பத்மநாபபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேட்டை சந்தை அருகே உள்ள மீன்சந்தை மற்றும் இறைச்சிகடைகளில் காண முடிந்தது. பத்மநாபபுரம் மீன் சந்தையில் நீண்ட வரிசையில் நின்று மீன்களை வாங்கி சென்றனர். 

விற்று தீர்ந்தது

இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘நாளை (அதாவது இன்று) மீன்சந்தை மூடப்படும் தகவல் பெரும்பாலானவர்களுக்கு தெரிய வில்லை. மீன் வாங்க சந்தைக்கு வந்த போது, நாங்கள் கூறிய பின்னர் அவர்கள் 2 நாட்களுக்கு சேர்த்து போட்டி, போட்டு மீன் வாங்கி செல்வதால் மீன் உடனடியாக விற்று தீர்ந்து விட்டது. இதனால் தினமும் மீன்வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மீன் கொடுக்க முடியாமல் போய் விட்டது’ என்றார்.
இதே போல் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தை மற்றும் இறைச்சிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. அதிலும் மீன் சந்தைகளில் மீன்கள் வேகமாக விற்று தீர்ந்து விட்டது.

Next Story