சேலம் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தயார் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்


சேலம் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தயார் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 30 April 2021 9:15 PM GMT (Updated: 30 April 2021 9:15 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 4 இடங்களில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில்உள்ளது. அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 4 இடங்களில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில்உள்ளது. அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
தமிழக சட்டபேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் எண்ணப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, ஏற்காடு, ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் நாளை காலை 7.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், உடல் வெப்ப நிலை பரிசோதனையில் 98.5 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி, அம்மாபேட்டை கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி, சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனம் மற்றும் தலைவாசல் மாருதி கல்வி நிறுவனங்கள் ஆகிய 4 இடங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேஜைகள், சேர்கள், தடுப்பு வேலிகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணும் இடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பிறகு ஒவ்வொரு சுற்றும் முடிந்த பின்பு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன்பு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்கள் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story