அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர்- 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா


அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர்- 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 April 2021 10:35 PM GMT (Updated: 30 April 2021 10:35 PM GMT)

அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர், 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஈரோடு
அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர், 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
வங்கி ஊழியருக்கு கொரோனா
அந்தியூர் பஸ் நிலையம் அருகே கனரா வங்கி உள்ளது. இங்கு பணியாற்றக்கூடிய 24 வயதுடைய பெண் ஊழியர் ஒருவர் தொடர்ந்து 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் அவர் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை எடுத்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய 45 வயதுடைய வருவாய் துறையை சேர்ந்த பெண் அதிகாரிக்கும் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாமல் தாலுகா அலுவலகத்துக்கு  பொதுமக்கள் ஏராளமானோர் வந்து திரும்பிச் சென்றனர்.
பர்கூர் மலைக்கிராமத்தில்...
இதேபோல் பர்கூர் மலைப்பகுதியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், எலச்சிபாளையம் பகுதியில் 48 வயதுடைய ஆண், 15 வயதுடைய சிறுவன், 14 வயதுடைய சிறுமி, 11 வயதுடைய சிறுவன், 19 வயதுடைய சிறுவன், 30 வயதுடைய பெண், 34 வயதுடைய பெண், 8 வயதுடைய சிறுமி ஆகிய 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர அத்தாணி பகுதியில் 55 வயதுடைய ஆண் மற்றும் 55 வயதுடைய பெண் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஆப்பக்கூடல்
அந்தியூரை அடுத்த 55 வயதுடைய ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட செயல் அதிகாரி ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு் உள்ளார்.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் 34 பேருக்கும், அருகே உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணிபுரியும் 10 தொழிலாளர்களுக்கும் நேற்று ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கொரோனா பரிசோதனை எடுத்தனர்.
சிவகிரி
சிவகிரி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் 4 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வீடுகள் உள்ள பகுதிக்கு ஆட்கள் யாரும் செல்ல முடியாதவாறு சுகாதாரத்துறை சார்பில் தகரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டு் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தியூர் வங்கி, தாலுகா அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி தலைமையிலும், பர்கூர் மலைக்கிராமம் மற்றும் எலச்சிபாளையத்தில் ஊராட்சி செயலாளர் குமார் தலைமையிலும், அத்தாணி பகுதியில் பேரூராட்சி செயல் அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையிலும் மற்றும் சிவகிரி பேரூராட்சி சார்பிலும் கிருமிநாசினி அடித்தும், பிளீச்சிங் பவுடர் போடப்பட்டும் வருகின்றன.

Next Story