ஆறுமுகநேரி தலைவன்வடலியில் உப்பளம் அருகில் நெற்பயிரிட்ட விவசாயி அறுவடைக்கு தயாராக உள்ளது


ஆறுமுகநேரி தலைவன்வடலியில்  உப்பளம் அருகில் நெற்பயிரிட்ட விவசாயி  அறுவடைக்கு தயாராக உள்ளது
x
தினத்தந்தி 1 May 2021 11:40 AM GMT (Updated: 1 May 2021 11:40 AM GMT)

ஆறுமுகநேரி தலைவன்வடலியில் உப்பளம் அருகில் விவசாயி பயிரிட்ட நெற்பயிர்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி தலைவன்வடலியில் உப்பளம் அருகில் விவசாயி பயிரிட்ட நெற்பயிர்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

உப்பளங்கள்

உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி பகுதியிலும் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆறுமுகநேரி- தூத்துக்குடி மெயின் ரோட்டின் கிழக்கு பகுதியில் உப்பளங்களும், மேற்கு பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளன.

உப்பளங்களின் அருகில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் உப்பு நீர் புகுந்து உவர்ப்பு தன்மை அதிகமாக இருப்பதால் போதிய விளைச்சல் இல்லாத நிலை இருந்தது. இதனால் அந்த நிலங்கள் பெரும்பாலும் தரிசாக விடப்பட்டன.
இந்த நிலையில் ஆறுமுகநேரி அருகே தலைவன்வடலியில் சுதாகர் என்பவர் தனது உப்பளத்தின் அருகிலேயே நெல் பயிரிட்டு அசத்தி உள்ளார். அவை தற்போது நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
இதுகுறித்து விவசாயி சுதாகர் கூறியதாவது:-

களிமண் மூலம்... 

உப்பளத்தின் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு உப்பு நீர் புகுவதால் போதிய விளைச்சல் கிடைக்கப் பெறாத நிலை இருந்தது. எனவே உப்பளத்தில் இருந்து உப்பு நீர் வௌியேறாதவாறு களிமண் மூலம் பாத்தி அமைத்தோம். இதனால் உப்பளத்தின் அடிப்பகுதி கான்கிரீட் போன்று இறுகியது. இதன் மூலம் உப்பளத்தில் இருந்து கசிவுநீர் வெளியேறவில்லை.

தொடர்ந்து உப்பளத்தில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் ஆர்.என்.ஆர். ரக நெல் பயிரிட்டோம். தற்போது நெற் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதன் மூலம் உப்பளங்களின் அருகிலும் நல்ல முறையில் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story