சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 5:22 PM GMT (Updated: 1 May 2021 5:22 PM GMT)

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, ஜல்லிபட்டி, அய்யம்பாளையம், குமாரபாளையம், செஞ்சேரிப்புத்தூர் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இவைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுல்தான்பேட்டை வட்டாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் (ஏப்ரல் மாதம்) மட்டும் மொத்தம் 115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 45 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். தற்போது 70 பேர் கோவை, பல்லடம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரவல் அதிகரிப்பால் சுகாதாரத்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கபசுர குடிநீர் வழங்குதல், உள்ளாட்சி நிர்வாகம் மூலம் தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். 

இதுகுறித்து வட்டார ஆணையாளர் சிவகாமி, வட்டாரசுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் வனிதா ஆகியோர் கூறியதாவது:- சுல்தான்பேட்டை சுற்று வட்டாரத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

 வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இறப்பு, திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அரசால் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போடடுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story