4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது


4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது
x
தினத்தந்தி 1 May 2021 5:44 PM GMT (Updated: 1 May 2021 5:44 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டததில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது.

கள்ளக்குறிச்சி


சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது. 

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை இன்றுநடைபெறுகிறது. முன்னதாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதைத் தொடர்ந்து  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்காக ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்பட உள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.  கள்ளக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் 30 சுற்றுகளாகவும், சங்கராபுரம் தொகுதி 27 சுற்றுகளாகவும், ரிஷிவந்தியம் தொகுதி 27 சுற்றுகளாகவும், உளுந்தூர்பேட்டை தொகுதி 30 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story