லாரி- மொபட் மோதல்; பெண் பரிதாப சாவு


லாரி- மொபட் மோதல்; பெண் பரிதாப சாவு
x
தினத்தந்தி 1 May 2021 6:37 PM GMT (Updated: 1 May 2021 6:37 PM GMT)

பொற்றையடி அருகே கணவர் கண் எதிரே லாரி டயரில் சிக்கி பெண் இறந்தார்.

தென்தாமரைகுளம்:
பொற்றையடி அருகே கணவர் கண் எதிரே லாரி டயரில் சிக்கி பெண் இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மீன் வியாபாரி
வடக்கு தாமரைகுளம் அருகில் உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 68). இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள் (53). இவர்களுக்கு மோகன செல்வி (28), கீதா (26) என இரு மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 
அருணாச்சலமும், கிருஷ்ணம்மாளும் கடற்கரைக்கு சென்று மீன் வாங்கி, அதை ஊர், ஊராக சென்று விற்பனை செய்து வந்தனர்.
டயரில் சிக்கி பலி
இந்தநிலையில், நேற்று காலை கணவன், மனைவி இருவரும் மொபட்டில் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து மீன் வாங்கிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி அருகே இலங்காமணி புரத்தில் சென்று கொண்டு இருந்தனர். 
அப்போது எதிரே பாறை பொடி ஏற்றி வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் மொபட்டிலிருந்து கிருஷ்ணம்மாள் தவறி கீழே விழுந்தார். அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். 
தனது கண் எதிரே மனைவி இறந்ததை பார்த்து அருணாச்சலம் கதறி அழுதார். உடனே டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
கைது
இதுபற்றி அருணாச்சலம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிருஷ்ணம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, தப்பியோடிய லாரி டிரைவர் மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த ராம்சன் (44) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story