கொரோனா 2-வது அலையை மோடி கட்டுப்படுத்துவார்- பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி


கொரோனா 2-வது அலையை மோடி கட்டுப்படுத்துவார்- பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 1 May 2021 7:45 PM GMT (Updated: 1 May 2021 7:45 PM GMT)

கொரோனா 2-வது அலையை மோடி கட்டுப்படுத்துவார் என முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை, மே:
கொரோனா 2-வது அலையை மோடி கட்டுப்படுத்துவார் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அன்ன முத்திரை பூஜை

நெல்லை அருகே உள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சித்திரை 18-ம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, நேற்று அன்னமுத்திரை பூஜை நடந்தது.
இதில் பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று வழிபட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருத்து கணிப்பு

நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலானது நதிகளை காப்பதிலும், பசுக்களை பாதுகாப்பதிலும் சிறப்பான பணிகளை செய்து வருகிறது. 
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி  இடைத்தேர்தலிலும் கடந்த 1½ மாதமாக பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து சிறப்பாக தேர்தல் பணியாற்றினர். 
தேர்தல் முடிவுகள் நாளை (அதாவது இன்று) தெரிந்து விடும். சிலர் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடுவோம் என்று கருதுகின்றனர். எனக்கு தேர்தல் கருத்து கணிப்புகளில் நம்பிக்கை கிடையாது.

கொரோனா கட்டுப்பாடு

கொரோனா முதல் அலை வந்தபோது, உலக நாடுகளை மிஞ்சும் வகையில், பிரதமர் மோடி செயல்பட்டார். தற்போது 2-வது அலை எதிர்பாராதவிதமாக வந்துள்ளது.
நோய் எதிர்ப்பு மருந்து தயாரிப்பில் நமது நாடு முன்னிலை வகிப்பதுடன், பிற நாடுகளுக்கும் மருந்து வழங்கி வருகிறோம். 
கொரோனா பரவல் 2-வது அலையை மோடி எளிதாக சமாளித்து கட்டுப்படுத்துவார். நோய் தடுப்பு நடவடிக்கையில் மோடி வெற்றி பெற்று, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story