கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு: சேலத்தில் இறைச்சி, மீன் கடைகள் அடைப்பு


கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு: சேலத்தில் இறைச்சி, மீன் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 1 May 2021 8:10 PM GMT (Updated: 1 May 2021 8:10 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன.

சேலம்:
கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன.
இறைச்சி கடைகள் அடைப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது பலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். இதன் மூலம் பலருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதனால் சனிக்கிழமையும் இறைச்சி, மீன் கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.
கடைகள் அடைப்பு
அதன்படி, சேலம் பழைய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் இறைச்சி கடைகள், மீன் கடைகள் செவ்வாய்பேட்டையில் உள்ள இறைச்சி கடைகள், சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட் என மாநகரில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாநகரில் இறைச்சி கடைகள் செயல்படுகிறதா? என மாநகராட்சி அதிகாரிகள் 4 மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story