கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 8:52 PM GMT (Updated: 2 May 2021 8:52 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.

நாகர்கோவில்:
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்  வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், திமு.க. கூட்டணி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையொட்டி சட்டசபை பொதுதேர்தலோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. 
இந்த தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி பொது செயலாளருமான விஜய் வசந்த் என்ற விஜயகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். 
இவர்களை தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் அனிட்டர் ஆல்வின், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுபா சார்லஸ் உள்பட 10 பேர் போட்டியிட்டனர். கடந்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 

தொடர்ந்து முன்னிலை

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணனை விட சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வந்தார். ஒன்றிரண்டு சுற்றுகளில் பொன். ராதாகிருஷ்ணன் முந்தினார்.
இருப்பினும் நேற்று மாலை வரை நடந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் விஜய் வசந்த் 5 லட்சத்து 67 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்றிருந்தார். பொன்.ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 32 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று பின்தங்கினார். இதனால், பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை விட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர்களுக்கு அடுத்த படியாக அனிட்டர் ஆல்வின் 52 ஆயிரத்து 221 வாக்குகளும், சுபா சார்லஸ் 8,447 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் தபால் ஓட்டுகள் முடிவு வராததால் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.

மொத்த வாக்குகள்- 15,71,651
பதிவான வாக்குகள்- 10,82,820
விஜய் வசந்த் (காங்கிரஸ்)- 5,67,280
பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா)- 4,32,906
அனிட்டர் ஆல்வின் (நாம் தமிழர் கட்சி)- 52,221
சுபா சார்லஸ் (மக்கள் நீதி மய்யம்)- 4,899

Next Story