கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை துணை ராணுவம்-போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை துணை ராணுவம்-போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 2 May 2021 9:19 PM GMT (Updated: 2 May 2021 9:19 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் விறு, விறுப்பான வாக்கு எண்ணிக்கை நடந்தது.

கடலூர், 

தமிழக சட்டசபைக்கான காலம் வருகிற 24-ந்் தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அறிவித்தது. மேலும் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்தது.
இதில் மாவட்டத்தில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 415 ஆண்களும், 8 லட்சத்து 42 ஆயிரத்து 909 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 88 பேரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 412 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காலை 7 மணிக்கே வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பரிசோதனை

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஏற்கனவே கொரோனோ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் வேட்பாளர்களின் முகவர்கள் தனியாகவும், வாக்கு எண்ணும் அலுவலர்கள் தனியாகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதைகள் வழியாக வாக்கு எண்ணும் அறைக்குள் சென்றனர்.

விறு, விறுப்பான    வாக்கு எண்ணிக்கை

தொடர்ந்து தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்த அறைகளில் இருந்து எடுத்து வரப்பட்டு விறு, விறுப்பாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அங்குள்ள பலகையிலும், ஒலிப்பெருக்கி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது.
பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்திருந்தனர். வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு தனி பாதையும், வாக்கு எண்ணும் அலுவலர்கள் தங்கள் அறைக்கு செல்ல தனி பாதையும் அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அனைவரும் அந்த வழியாக சென்றனர்.
பண்ருட்டி, நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. தொடர்ந்து காலை 8.15 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.

காலதாமதம்

பின்னர் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி வைக்கப்பட்டு இருந்த அறைகள் திறக்கப்பட்டு, எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. முதல் சுற்று வாக்கு எண்ணும் பணி காலதாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.
இதேபோல் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) 3 தொகுதிகளுக்கும் சி.முட்லூர் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது. விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் நடந்தது.
வாக்கு எண்ணும் பணியில் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

Next Story