நெல்லை அரசு என்ஜீனியரிங் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை


நெல்லை அரசு என்ஜீனியரிங் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 10:04 PM GMT (Updated: 2 May 2021 10:04 PM GMT)

நெல்லை அரசு என்ஜீனியரிங் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடந்தது.

நெல்லை, மே:
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது. கொரோனா காரணமாக முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்குகள் பதிவான எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருந்தன. 
அங்கு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. 

விறுவிறுப்பு

முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகளை பிரித்து எண்ணும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர். ஓட்டு எண்ணிக்கொண்டிருந்த போேத காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி ெதாடங்கியது. ஒவ்வொரு தொகுதிக்கும் போடப்பட்டிருந்த 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது மேஜைகளை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த வலைப்பகுதிக்கு வெளியே முகவர்கள் நின்றிருந்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசையாக கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது. சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, முன்னிலை பெற்ற கட்சிகளின் முகவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

முகவர்களுக்கு கட்டுப்பாடுகள்

வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வருவதற்காக தொகுதி வாரியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக அவர்கள் வரிசையாக வந்தனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 
அவர்கள் செல்போன், பீடி, சிகரெட், தீப்பெட்டி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை வாக்கு எண்ணும் மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் சமூக இடைவெளியுடன் நிறுத்தி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கைகளில் சானிடைசர் திரவமும் தெளிக்கப்பட்டது.

2 ஆயிரத்து 800 போலீசார்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்த வேட்பாளர்கள், முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலக வளாகம் மற்றும் அதன் எதிரே உள்ள காலி இடங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து அவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு நடந்தே வந்தனர்.
இந்த வாக்கு எண்ணிக்கையையொட்டி சுமார் 2 ஆயிரத்து 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர ஏற்கனவே 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரும், துணை ராணுவத்தினரும் தொடர்ந்து பணியாற்றினர். 

Next Story