பவானிசாகர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது


பவானிசாகர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 3 May 2021 12:30 AM GMT (Updated: 3 May 2021 12:30 AM GMT)

பவானிசாகர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

ஈரோடு
பவானிசாகர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது.
பவானிசாகர் தொகுதி
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) என 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க, சார்பில் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பி.எல்.சுந்தரம், தே.மு.தி.க. சார்பில் ஜி.ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜி.சக்திவேல், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கா.கார்த்திக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் வெ.சங்கீதா ஆகிய 6 பேர் களத்தில் இருந்தனர்.
77.36 சதவீத வாக்குகள் பதிவு
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 274 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 965 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 249 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 382 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 962 பேரும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 2 லட்சத்து 1,345 பேர் வாக்களித்தனர். 77.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கின.
தபால் ஓட்டு
முதல் சுற்றில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் 3 ஆயிரத்து 277 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் பண்ணாரி 2 ஆயிரத்து 777 வாக்குகளும் பெற்றனர். முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெற்ற பி.எல்.சுந்தரம் அடுத்து 19 மற்றும் 26 ஆகிய 2 சுற்றுகளில் மட்டுமே அதிக வாக்குகள் பெற்றார். மற்ற அனைத்து சுற்றுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் பண்ணாரியே கூடுதலாக வாக்குகள் பெற்றார். இதேபோல் தபால் ஓட்டை பொறுத்தவரையில் பி.எல்.சுந்தரம் 973 வாக்குகளும், பண்ணாரி 247 வாக்குகளும் பெற்றனர்.
மொத்தம் பதிவான 1,549 தபால் ஓட்டுகளில் 265 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் ஆகும். வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பண்ணாரி மொத்தம் 99 ஆயிரத்து 181 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் 83 ஆயிரத்து 173 வாக்குகளும் பெற்றனர்.
அ.தி.மு.க. வெற்றி
இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தை விட கூடுதலாக 16 ஆயிரத்து 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர், அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பண்ணாரியிடம் வெற்றி சான்றிதழை வழங்கினார். பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1.ஏ.பண்ணாரி (அ.தி.மு.க.) - 99,181
2.பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி-தி.மு.க. கூட்டணி) - 83,173
3.ஜி.ரமேஷ் (தே.மு.தி.க.) - 2,197
4.ஜி.சக்திவேல் (பகுஜன்சமாஜ் கட்சி) - 1,197
5.கா.கார்த்திக்குமார் (மக்கள் நீதி மய்யம்) -4,297
6.வெ.சங்கீதா (நாம் தமிழர் கட்சி) - 8,517
நோட்டா - 2,005
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஈஸ்வரன் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் பவானிசாகர் தொகுதியை மீண்டும் அ.தி.மு.க தக்கவைத்துள்ளது.

Next Story