சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி: அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து


சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி: அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 3 May 2021 12:42 AM GMT (Updated: 3 May 2021 12:42 AM GMT)

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கின்றன. தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 3-ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. புதிய அரசை அமைக்கவிருக்கும் தி.மு.கவுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்கவிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பனவற்றை நிறைவேற்றுவார். நடைபெற்ற தேர்தல் என்ற இனமானப்போரில், ‘திராவிடம் வெல்லும்-நாளைய வரலாறு இதைச் சொல்லும்’ என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அது மக்கள் தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது. நம் பிரகடனம் மெய்யானது. மு.க.ஸ்டாலின் உழைத்தார்; வென்றார். புதிய சாதனை வரலாறு படைத்தார்.

மக்களின் தெளிவான தீர்ப்புக்காக முதலில் அவர்களைப் பாராட்டி, சமூகநீதி மண், பெரியார் மண் என்பதை மீண்டும் உணர்த்திடும் வகையில் ஆட்சி அமைவதற்கு காரணமான வாக்காள பெருமக்களுக்கு நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் உரியதாகுக்குகிறோம். செயற்கரிய செயல்புரியும் ஆட்சி என்று செகத்தோர் பூரிப்படையும் ஆட்சியை மு.க.ஸ்டாலின் தருவார். அதன்மூலம் அனைவருக்கும் மீட்சியும் ஏற்படும் என்பது உறுதி. மு.க.ஸ்டாலினுக்கு தாய்க் கழகத்தின் வாழ்த்துகள், பூரிப்புடன். வெல்க திராவிடம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:-

திராவிட இயக்கத்தை, நம் அன்னைத் தமிழைக் கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறந்து உள்ளது. வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்துக்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம் விண் அதிர எங்கும் எதிரொலிக்கின்றது. வெற்றியைத் தவிர வேறு இல்லை என்று, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.

வெற்றிகள் தொடரட்டும். பணிகள் தொடங்கட்டும். தொடர்ந்து நிகழட்டும். புதிய வரலாறு படைக்கட்டும் என இந்தப் பொன்னான வேளையில், என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும். ஆட்சி மாற்றத்திற்கு வாக்கு அளித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், ஊவா மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான செந்தில் தொண்டமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்-கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் அறம் அருண், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், இந்திய கம்யூ னிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story