ஓமலூர், வீரபாண்டி தொகுதிகளில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி


ஓமலூர், வீரபாண்டி தொகுதிகளில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 1:10 AM GMT (Updated: 3 May 2021 1:10 AM GMT)

ஓமலூர், வீரபாண்டி தொகுதிகளில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி

சேலம்:
ஓமலூர், வீரபாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஓமலூர்
ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மணி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம், அ.ம.மு.க. சார்பில் மாதேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜா அம்மையப்பன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. 
காலை முதல் இரவு வரை 31 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்று முதல் கடைசி சுற்று வரையிலும் அ.தி.மு.க. வேட்பாளரே முன்னிலையில் இருந்தார். முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் மணி 1 லட்சத்து 42 ஆயிரத்து 455 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் 87 ஆயிரத்து 175 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதாவது 55 ஆயிரத்து 280 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மணி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் மணியிடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஓமலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதப்பிரியா வழங்கினார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த வெற்றிவேல் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 2021 சட்டமன்ற தேர்தலிலும் ஓமலூர் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க.வே வெற்றிவாகை சூடியுள்ளது.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்-2,95,894
பதிவானவை-2,46,424
செல்லாதவை- 969
மணி (அ.தி.மு.க.)-1,42,455
மோகன்குமாரமங்கலம் (காங்கிரஸ்)-87,175
ராஜஅம்மையப்பன் (நாம் தமிழர் கட்சி)-9,382
சீனிவாசன் (மக்கள் நீதி மய்யம்)-2,929
மாதேஸ்வரன் (அ.ம.மு.க.)-1,202
நோட்டா-1,581
இந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 13 பேர் டெபாசிட் இழந்தனர்.
வீரபாண்டி தொகுதி
வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க. சார்பில் ராஜா என்கிற ராஜமுத்து, தி.மு.க. சார்பில் டாக்டர் தருண், அ.ம.மு.க. சார்பில் எஸ்.கே.செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ்குமார், ஐ.ஜே.கே. கட்சி சார்பில் அமுதா உள்ளிட்ட 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று சேலம் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரியில் எண்ணப்பட்டன.
முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் ராஜமுத்து, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தருணை விட முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற 26 சுற்றிலும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ முத்துவே தொடர்ந்து முன்னிலை வகித்தார். இறுதியில் ராஜமுத்து 1 லட்சத்து 11 ஆயிரத்து 682 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் தருண் 91 ஆயிரத்து 787 வாக்குகள் பெற்றிருந்தார். இதன்படி 19 ஆயிரத்து 895 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜமுத்து வெற்றிவாகை சூடினார்.
இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மனோன்மணி வெற்றி பெற்று இருந்தார். தற்போது மீண்டும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்-2,60,006
பதிவானவை- 2,22,394
செல்லாதவை-573
ராஜமுத்து (அ.தி.மு.க.)-1,11,682
தருண் (தி.மு.க.)-91,787
ராஜேஸ்குமார் (நாம் தமிழர்கட்சி)-9,806
எஸ்.கே.செல்வம் (அ.ம.மு.க.)-4,986
அமுதா (ஐ.ஜே.கே.)-1,302
நோட்டா-1,409

Next Story