புதிதாக 880 பேருக்கு நோய் தொற்று; 7 பேர் உயிரிழப்பு


புதிதாக 880 பேருக்கு நோய் தொற்று; 7 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 May 2021 1:14 AM GMT (Updated: 3 May 2021 1:14 AM GMT)

மதுரையில் நேற்று புதிய உச்சமாக 880 பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோல், ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.

மதுரை
மதுரையில் நேற்று புதிய உச்சமாக 880 பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோல், ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஒரே நாளில் 7 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனா கடந்த ஆண்டை போல் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகமல் இருந்தநிலையில் தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் நேற்று ஒரே நாளில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியிலும் மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள்.
மதுரையை சேர்ந்த 35 வயது வாலிபர், 40, 43, 57 வயது ஆண்கள், 61, 69 வயது முதியவர்கள், 62 வது மூதாட்டி என 7 பேர் அடுத்தடுத்து உயரிழந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததுடன் வேறு சில இணை நோய்களும் இருந்ததால் இவர்கள் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.
புதிய உச்சம் 880
உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது போல், நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்றும் புதிய உச்சமாக 880 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவின் முதல் அலையில் கூட மதுரையில் இந்த அளவிற்கு அதிகமாக யாரும் ஒரே நாளில் பாதிக்கப்படவில்லை. இதுவே மதுரையில் பதிவான அதிகபட்ச பாதிப்பாக இருக்கிறது.
நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 650 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
மதுரையில் இதுவரை 32 ஆயிரத்து 390 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 638 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 27 ஆயிரத்து 392 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 482 ஆக உயர்ந்துள்ளது.

Next Story