கேரளாவில் கடையில் புகுந்து ரூ.17 லட்சம் செல்போன்கள் கொள்ளை அடித்த 3 பேர் கைது கசாரா அருகே பிடிபட்டனர்


கேரளாவில் கடையில் புகுந்து ரூ.17 லட்சம் செல்போன்கள் கொள்ளை அடித்த 3 பேர் கைது கசாரா அருகே பிடிபட்டனர்
x
தினத்தந்தி 3 May 2021 10:53 AM GMT (Updated: 3 May 2021 10:53 AM GMT)

கேரளாவில் கடையில் புகுந்து ரூ.17 லட்சம் செல்போன்கள் கொள்ளை அடித்த 3 வெயிட்டர்கள் கசாரா அருகே போலீசாரிடம் பிடிபட்டனர்.

மும்பை, 

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பேட்டா பகுதியில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவில் அங்குள்ள செல்போன் கடையில் புகுந்த மர்மநபர்கள் கடையில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளை அடித்து சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடையின் அருகே உள்ள ஓட்டலில் வெயிட்டராக வேலை பார்த்து வந்த மஞ்சித் ஹூடா, விரேந்திர நேபாளி, சூரஜ் தாமி ஆகிய 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர்கள் டெல்லி செல்லும் மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்வதாக கேரளா போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த ரெயில் மராட்டிய மாநிலம் பன்வெல் அருகே செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து பன்வெல் ரெயில்வே போலீசாருக்கு கேரள போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் ரெயில்வே போலீசார் மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி 3 பேரையும் தேடினர். கசாரா ரெயில் நிலையம் வந்தபோது கொள்ளை கும்பலை சேர்ந்த மஞ்சித் ஹூடா போலீசாரிடம் பிடிபட்டார்.

உடன் இருந்த 2 பேர் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பிஓடினர். ஆனாலும் ரெயில்வே போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.17 லட்சம் திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட அனைவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

Next Story